Monday, June 7, 2010

மயான பூமி!

நேற்றுவரை பெற்றோருடன் இருந்த குழந்தை, அநாதையாய்த் தலையில் கட்டுடன்... முண்டாசைப் போன்ற அந்த பிளாஸ்திரி கட்டில் ’unknown’ என்ற ஆங்கில வாசகம்! கன்னத்தில் சிராய்ப்பு, கண்களில் குளம் கட்டிய நீர். அரிசிப் பல் தெரிய அழும் அக்குழந்தையின் புகைப்படம், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ஞானேசுவரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தின் பின் விளைவு. இவ்வாறு 140 வாழ்க்கைகள் கணத்தில் சூனியமாகி யிருக்கின்றன. இதற்கான கொடிய சதித் திட்டங்களைத் தீட்டவும் செயல்படுத்தவும் துணியும் அமைப்புகளை ஒடுக்குவதும், அவற்றிடமிருந்து மக்களைக் காப்பதும் அரசின் பொறுப்பு; கடமை. ஆனால், பிரதமரோ, நாக்ஸல்களுக்கு எதிரான அரசின் கொள்கையை இப்போதுதான் சாவகாசமாக அறிவித்திருக்கிறார்! வளர்ச்சி அபிவிருத்தி திட்டங்களின் பயன்பாடு அடித்தட்டு மக்களுக்குக் கிட்டும் என்றும், கூடவே அரசின் இறையாண்மை யும் வலிமையுடன் இயங்கும் என்றும் தமது அரசின் ஆண்டறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசு இயங்குவதற்குள், மேற்கு வங்கத்தில் நடந்தது போன்ற மேலும் அரை டஜன் சதித்திட்டங்களை, மாவோ தீவிரவாதிகள் அரங்கேற்றிவிட வாய்ப்பு இருக்கிறது!

தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் அடித்தட்டு மக்களின் (குறிப்பாகப் பழங்குடியினர்) ஆதரவு இயக்கமாகத்தான் மாவோ இயக்கம் ஆரம்பமாயிற்று. ஆனால், இன்று அவ்வியக்கம் அந்த அடித்தட்டு மக்களையே கிள்ளுக் கீரையாக எண்ணி, சதித் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்துகிறது. சத்திங்கரில் பஸ்ஸில் பயணம் செய்த 24 சாமானியர்கள், கண்மூடித்தனமாகக் குண்டு வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்! பெட்ரோலியம் எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று, மாவோயிஸ்டுகளின் குண்டுக்கு இலக்காகிப் பற்றி எரிந்ததில், மக்களுக்குக் கோடிக் கணக்கில் நஷ்டம். இப்படியாக, சாமானிய மக்களின் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் தொடர்கதையாகி வருகின்றன.

“எங்கள் இலக்கு சாதாரண மக்கள் அல்ல; அதிகார வர்க்கம்தான்” என்று கூறிவந்த மாவோ இயக்கம், இப்போது அதிகார வர்க்கத்துக்குச் சங்கடம் உண்டாக்க சராசரி மக்களைப் பலிகொடுக்கத் துணிந்துவிட்டது!

கவனிக்கப்படாமல் விடப்பட்ட கிராம மக்கள், பழங்குடியினர் பலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் ரயில் கவிழ்ப்புச் சதி போன்ற திட்டங்களை நிறைவேற்றவோ ஆதரிக்கவோ மாட்டார்கள்; தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களுக்கு மாவோ இயக்கம் அயல்நாட்டு வன்முறை இயக்கங்களிடமிருந்து உதவி பெற்று வருகிறது; தொடர்ந்து சீன ஆதரவு கிட்டி வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். மத்திய அரசு மாவோ இயக்கத்தினருக்குத் தேதி குறிப்பிட்டு கடைசி கெடு வைத்து, பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும். அவர்கள் ஒப்பாவிடில் ராணுவத் தாக்குதல் நடத்தி அவ்வியக் கத்தினரை ஒழிப்பதில் தவறில்லை என்பதுடன் அது அரசின் கடமையும்கூட. இதன் பயனாகச் சில பல அப்பாவி உயிர்களும் பலியாகக் கூடும்தான். ஆனால், அதற்கு பயந்து அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தால், மாவோக்கள் வெகு விரைவில் இந்தியா வையே மயானமாக்கிவிடுவார்கள். அப்போது பலியாகும் அப்பாவி உயிர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது!
(குறிப்பு: இது ஒரு புத்தகத்தில் படித்தது)

No comments:

Post a Comment