Tuesday, June 29, 2010

அவசர நிலை(Emergency)

அவசரகால நிலையும் இராணுவமயமாகும் ஜனநாயகமும்
எம்.ஜி. தேவசகாயம் அவர்களுடன் நேர்காணல்
நிருபர்:இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்ட அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலத்தில் இந்திய ஆட்சிப் பணியில் இருந்த அதிகாரி நீங்கள். அவசரகால பிரகடனத்தை எதிர்த்து இரண்டாவது சுதந்திரப் போர் என்று எதிர்ப் பிரகடனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனுடம் நெருங்கிப் பழகியவர். இன்றுள்ள தலைமுறைக்கு அவசரகால நாட்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. 35 ஆண்டுகளுக்கு முன், 1975ஆம் ஆண்டில் இதே நாளில்தான் அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தார். அந்த நாட்களை நினைவு கூறுங்கள்


(FILE PICTURE)
எம்.ஜி. தேவசகாயம்: 1975ஆண்டு ஜூன் திங்கள் 25ஆம் நாள் இரவு அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்தார். அன்றிலிருந்து அடுத்த 20 மாதங்களுக்கு நீடித்த அந்த அடக்குமுறைக் காலம், 35 ஆண்டுகள் சென்ற பிறகும் இந்த தேசத்தின் நினைவிகளில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டின் அரசமைப்பு உறுதி செய்த ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் நடைமுறையில் இல்லாமல் செய்யப்பட்ட நாட்கள் அவை.

இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கிய சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு 14), உயிருக்குப் பாதுகாப்பு மற்றும் தனி மனிதச் சுதந்திரம் (பிரிவு 21), கைது செய்து தடுத்து வைப்பதற்கு எதிராக பல்வேறு பாதுகாப்புகள் (பிரிவு 22) ஆகிய முக்கியமான உரிமைகள், சுதந்திரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் மூலம் முடக்கப்பட்டன. இவை மட்டுமின்றி, மக்களின் கழுத்தை நெறிக்கும் பல எதேச்சாதிகார சட்டங்களும், உத்தரவுகளும் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. உள்நாட்டுப் பாதுகாபபு பராமரிப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act - MISA) போன்ற சட்டங்களும், உத்தரவுகளும், அரசமைப்பில் செய்யப்பட்ட திருத்தங்களும் நீதிமன்றம் சென்று சட்ட நிவாரணம் பெறும் வாய்ப்புகள் அனைத்தையும் பறித்தன. எவ்விதக் காரணமுமின்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எவரும் நீதிமன்றத்தை நாட முடியவில்லை.

அவசர நிலை பிறக்கப்பட்டிருந்த 20 மாத காலமும் பத்திரிக்கைச் சுதந்திரம் முடக்கப்பட்டிருந்தது. நாட்டில் நிலவிய இப்படிப்பட்ட அசாதரணமான சூழல் மக்களை அச்சப்படுத்தியது. எப்போதும் சத்தமாக வாழ்ந்து வந்த அவர்கள் ஒரு அழுத்தமான மெளனத்துடன் நடமாடிமானார்கள். ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு வளைந்து கொடுங்கள் என்று கேட்டதற்கு, அவர்களின் கட்டளைகளுக்கு தவழ்ந்து பணிவிடை செய்தனர் அதிகாரிகள். வாழ்வுரிமை பறிக்கப்பட்ட நிலையில் மக்கள் இருக்க, நீதித்துறையின் மேல் அமைப்புகளோ ஆட்சியாளர்களின் தூசிற்குத் தலை வணங்கி சேவை புரிந்தன. நேர்மையான சில அரசியல் தலைவர்கள் தவிர, மற்ற எல்லா வண்ண அரசியல்வாதிகளும். தலைவர்களும் முதுகெலும்பற்று மண்டியிட்டனர். இந்தியாவின் குடிமக்கள் ஒரு அராஜக அரசின் எதேச்சாதிகாரத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டிய சாதாரண குடிகளாயினர்.

“இந்த நாட்டின் வரையறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன, ஆட்சியாளர்கள் இந்த நாடு முழுவதையும் தங்களுடையதாக்கிக் கொண்டுள்ளனர். ஆளும் கட்சியும், அதன் தலைவரும் இந்த நாட்டை தங்களுடைய பண்ணைச் சொத்தாக கருதுகின்றனர். இந்த நாட்டின் மையமான ஆட்சி அமைப்பை தங்களுடைய அரசியல் வாழ்வை காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் குடும்பத்தின் மேம்பாட்டிற்குமாகவும் மாற்றிக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள், இந்த நாட்டின் சமூக கூட்டமைப்பின் மீது எதேச்சாதிகாரத்தை திணித்துள்ளனர். அரசியல் கத்துக்குட்டியான தனது குடும்ப உறுப்பினரைக் (சஞ்சய் காந்தி) கொண்டு நாடு முழுவதும் அச்சுறுத்ததலையும், பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு, அதன் மூலம் எல்லா அமைப்புகளையும் தூக்கி எறிந்து கேலிக் கூத்தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். 28 ஆண்டுக்கால ஜனநாயக வழிமுறை கொண்ட ஒரு நாட்டில் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மனித உரிமைப் போராளி ரஜ்னி கோத்தாரி அப்போது கூறினார்.


(FILE PICTURE)
ஆனால், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் ஒரு பொய் அறிக்கையை வெளியிட்டு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதை இந்திரா காந்தி நியாயப்படுத்தினார். ‘எதற்காக அவசர நிலை’ என்ற பெயரில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “நமது நாட்டில் ஒழுக்கத்தையும், நிலைத்தன்மையையும் நிலை நிறுத்தவே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதும், அதனையொட்டி பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதற்கான காரணமுமாகும். இந்திய சமூகத்தின் பல்வேறு அங்கங்கள் இதனை வரவேற்கின்றன. ஜனநாயகத்தை சரியான பாதையில் கொண்டுவருவதற்குத்தான் பிரதமர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்” என்று அந்த பொய்யறிக்கை கூறியது.

இந்தியாவில் வாழ்ந்த, இந்த உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்காக இருந்த நம் மக்கள், அதனை ஏற்கவில்லை. 20 மாதங்களுக்குப் பிறகு மக்களவைக்கு நடைபெற்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சிகளை (ஜனதா கூட்டணி) ஆட்சியில் அமர்த்தினர்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான், ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது. கொடுமையான அந்தக் காலத்தின் நிழல் இப்போது நமது நாட்டின் மீது மீண்டும் படரத் துவங்கியுள்ளது.

நிருபர்: மீண்டும்....? எதனால் அப்படி கருதுகிறீர்கள்?

எம்.ஜி. தேவசகாயம்: அன்று பிறக்கப்பட்டதைப் போன்று காட்டுமிராண்டிச் சட்டங்கள், அதுபோன்ற மனித உரிமை மீறல்கள், மராட்டியம், ஆந்திரம், ஒரிசா, சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாரண்ய வனப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை வெளியேற்ற நடைபெறும் ‘பச்சை வேட்ட’ நடவடிக்கை ஆகியவற்றையெல்லாம் பார்க்குபோது இந்த நாடு மிக வேகமாக ஒரு காவல்துறையால் கட்டுப்படுத்தப்படும் காவல் அரசாக (Police State) ஆகிவருவது தெரிகிறது. இலங்கையில் நடைபெற்று வருவதைப் போல் இங்கேயும் நாட்டை இராணுவ மயமாக்கியிருப்பார்கள். ஆனால், இவ்வளவு பெரிய நாட்டில் அது சாத்தியமில்லை, அதுவே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள ஒரே வேறுபாடு.

நிருபர்: இலங்கையோடு ஏன் ஒப்பிடுகிறீர்கள்?


(FILE PICTURE)
எம்.ஜி. தேவசகாயம்: எமர்ஜென்சியை அந்த நாடு தனது ஆளுமையின் ஒரு அங்கமாகவே ஆக்கிவிட்டது. அவசர நிலையை ஒவ்வொரு மாதமும் அது நீடித்துக் கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாக அந்த நாடு, காவல் துறையால் கட்டுப்படுத்தப்படும் நாடாக இருந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இராணுவ மயமாக்கப்படும் அரசாகி வருகிறது.

அங்கே நடப்பதும், இங்கே நடந்துகொண்டிருப்பதற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இலங்கையில் அந்நாட்டு மக்கள் மீதே அந்நாட்டு அரசு தொடுத்தப் போர் முடிந்த பிறகு, ஜூன் 2009இல், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் மனித உரிமைக் குழு ஒன்று கீழ்கண்டவாறு ஒரு மின்னஞ்சலை அனுப்பியது: “நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரியும் குழுக்களை ஒழிக்கப்போவதாக அறிவித்தது. இந்த அடிப்படையில்தான் சட்டீஸ்கர் மாநிலத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒருவர், இலங்கையில் கடைபிடிக்கப்பட்ட அதே முறையை கையாண்டு மாவோயிஸ்ட்டுகளையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் ஒழிக்கப்போவதாகக் கூறியுள்ளார”.

இதனைத் தொடர்ந்தே, இந்த ஆண்டு மே மாதம், நக்சலைட்டுகளுக்கு எதிராக ஆயுதப் படைகளை பயன்படுத்துவது தொடர்பான தனது ‘நிபுணத்து’த்தை இலங்கை அரசு இந்தியாவிற்கு வழங்க முன்வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது வெற்றி கண்டதற்குப் பிறகு நக்சலைட்டுகள் போன்ற கெரில்லா படைகளுக்கு எதிராக போர் நடத்துவதில் மிகத் தேர்ந்த படையாக சிறிலங்க படையினர் உள்ளனர் என்று இலங்கை அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கையில் கடைபிடிக்கப்பட்ட அதே ‘முறையை’ பயன்படுத்தி, இந்த நாட்டிற்கு ‘மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல’ என்று கருதப்படும் பழங்குடியினரை ஒழித்துக் கட்ட ஆயுதப் படைகளை பயன்படுத்துவது தொடர்பாக தனக்கு அதிக அதிகாரம் (Larger Mandate) அளிகப்ப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

இந்தப் பின்னணியில்தான், 1975ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 25ஆம் நாள் இரவு இந்தியாவில் பிரகடனம் செய்யப்பட்ட எமர்ஜென்சி நிலையை நமது மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 35 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கருப்புக் காலம் இந்த தேசத்தின் நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இன்று நமது நாட்டில் நிலவும் சூழல் ஓர் அறிவிக்கப்படாத அவசரகாலம் நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது, அதுவே பல்வேறு அமைப்புகளின் குரல்களிலும் எதிரொலிக்கிறது.


(FILE PICTURE)
நக்சலைட்டுகளை ஆதரிப்பவர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது, “இது எமர்ஜென்சி காலத்தில் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறையையே பிரதிபலிக்கிறது” என்று மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்தனர். சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது ‘ராஜ்நீதி’ திரைப்படத்திற்கு தணிக்ககைக் குழு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கருத்துத் தெரிவித்த தயாரிப்பாளரான பிரகாஷ் ஜா, “நாம் அவசர கால நிலையில் வாழ்கிறோமா?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போபால் விஷ வாயுக் கசிவு விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல அன்றைய பிரதமர் ராஜீவ் காநதியே காரணம் என்று உண்மையைப் பேசியவர்களை ‘தேசப்பற்று அற்றவர்கள்’ என்று காங்கிரஸ் தலைமைக்கு குற்றேவல் புரிபவர்களால் தூற்றப்படுகின்றனர். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை விமர்ச்சிதவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை இந்த மிரட்டல் நம் நினைவிற்கு கொண்டு வருகிறது.

“ஜூன் 26ஆம் தேதி எமர்ஜென்சியின் 35வது ஆண்டாகும். இப்போதும் இந்த நாட்டில் எமர்ஜென்சி காலம்தான் என்பதை (மத்திய அரசு அறிவிக்காததால்) இந்த நாட்டு மக்கள் அறிவிக்க வேண்டும்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறுவதற்கு இப்படிப்பட்ட அச்சங்கள்தான் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும்.

நிருபர்: கொழும்புவும் டெல்லியும் இந்த அளவிற்கு ஒத்துப் போகக் காரணம் என்ன?

எம்.ஜி. தேவசகாயம்: அதிகார வெறிகொண்ட, குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தும் எண்ணங்களைக் கொண்டவர்களின் பிடியில்தான் டெல்லியும், கொழும்புவும் உள்ளது, இதுவே அவர்களை ‘நல்ல’ நண்பர்களாக்கியுள்ளது போலும். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ஒன்றிணைந்துதான் வன்னிக் காடுகளில் தங்கள் கூட்டுத் திட்டத்தை (Joint Venture) நிறைவேற்றினார்கள். இந்தியா கொடுத்த ‘நிபுணத்துவத்த’க் கொண்டு, ஒரு கண்ணியமான, ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய தமிழர்களை சிறிலங்க படைகள் காட்டுமிராண்டித்தனமான கொடூரத்துடன் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தன. ‘தமிழர்களைக் கொன்று குவித்த ரத்தக் கறை நமது கைகளில் மட்டுமல்ல, நமது உடலில் மட்டுமல்ல, நமது மனசாட்சியிலும் மிக ஆழமாக படிந்துள்ளத’ என்று முன்னாள் தூதர் எம்.கே.பத்ரகுமார் கூறியுள்ளதை கவனித்தில் நிறுத்துங்கள்.


(FILE PICTURE)
எமர்ஜென்சியை கூர்மையான கருவியாக்கி தமிழனப் படுகொலையை நிகழ்த்தி முடித்த இலங்கை, காவல் அரசாக இருந்துவந்த நிலையில் இருந்து இராணுவ மய அரசாக மாறிக் கொண்டிருக்கிறது. கண்ணியமிக்க, ஜனநாயக உரிமைகளுடன் கூடிய ஒரு வாழ்க்கைக்காக போராடிவரும் தண்டகாரண்ய பழங்குடியின மக்களை கொன்றொழிக்க, தமிழர்களுக்கு எதிரான போரில் தான் பெற்ற ‘நிபுணத்துவத்த’ இந்தியாவிற்கு வழங்க சிறிலங்க அரசு முன்வந்துள்ளது. அதன் கூட்டுத் திட்டத்தையும் (Joint Venture) ஏற்க இங்குள்ள சிலர் ஆர்வமாயிருக்கின்றனர்.

அவசர நிலை விட்டுச் சென்ற மிக ஆபத்தான சொத்துதான் காவல் அரசு. அதை விட மோசமானது இராணுவ மயம். “வரலாற்றில் இருந்து தாங்கள் கற்க வேண்டியதை தவற விடுபவர்கள், அதே தவறைச் செய்து அழிந்து போவார்கள்” என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறியுள்ளார். நாட்டை இராணுவ மயமாக்கல் போன்ற வரலாற்றுத் தவறுகளை நாமும் செய்வோமானால், அது தெற்காசியாவில் நிலவி வரும் ஜனநாயகத்திற்கு பேரழிவாகவே முடியும். அதற்கான சான்று நம் வீட்டு புறக்கடையிலேயே உள்ளது.
நிருபர்: நன்றி அய்யா. 
அனுப்பியவர் அன்பு நண்பர் D.சரவண குமார்
                                                 (மயிலாடுதுறை)
நன்றி நண்பரே!

No comments:

Post a Comment